டிஜிட்டல் அடையாள அட்டை மோசடி ; ஆட்பதிவுத் திணைக்களம் எச்சரிக்கை
டிஜிட்டல் அடையாள அட்டைகளை பதிவு செய்தல் என்ற பெயரில் பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடிகள் இடம்பெற்று வருவதாக ஆட்பதிவுத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
ஆட்பதிவுத் திணைக்களம்
இது தொடர்பாக திணைக்களம் வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில், ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அவசர அழைப்பு இலக்கத்தை ஒத்த தொலைபேசி எண்கள் மூலம் மோசடி செய்பவர்கள் பொதுமக்களைத் தொடர்பு கொள்கின்றனர்.

குறிப்பாக +94 11 5226126, 011 5226126, 0771167739 மற்றும் 0742756098 ஆகிய எண்களைப் பயன்படுத்தி, திணைக்கள அதிகாரிகள் எனப் போலியாகக் கூறி தகவல்களைத் திரட்டுகின்றனர்.
இந்த மோசடியின் பின்னணியில் உள்ளவர்கள் அரச இலச்சினையை தவறாகப் பயன்படுத்தி ஒரு கைபேசி செயலியை உருவாக்கியுள்ளனர்.
டிஜிட்டல் அடையாள அட்டைப் பதிவுக்குத் தேவை எனக் கூறி, இந்தச் செயலி மூலம் மக்களின் தனிப்பட்ட விபரங்களைக் கோரி வருகின்றனர்.
ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ள “https://drpgov-lk[.]com” என்ற போலி இணையதள முகவரியூடாக எவ்வித தனிப்பட்ட தகவல்களையும் வழங்க வேண்டாம் எனத் திணைக்களம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.