விமர்சிப்பவர்களை தூக்காமல் நாடு திரும்பமாட்டேன்; பசில் அதிரடி!
அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் அமைச்சர்களை பதவி நீக்கிய பின்னரே நாடு திரும்புவேன் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்த வருட ஆரம்பத்தில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாகவும் அதன் பின்னரே அமெரிக்கா சென்றுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நாடு திரும்புவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் இந்த விடயம் குறித்த தனது உறுதியான நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தெரிவித்த பின்னரே அமெரிக்கா சென்றுள்ளார். மக்கள் மத்தியில் பிரபல்யமாவதற்காக அரசாங்கத்தின் செயற்பாடுகளிற்கு முட்டுக்கட்டை விதிக்கும் அமைச்சர்களுடன் இணைந்து பயணிப்பது கடினமான விடயம் எனவும் நிதியமைச்சர் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக நாடு தற்போது உள்ள பொருளாதார நிலையில் அரசாங்கம் மக்களின் ஆதரவு கிடைக்காத பல நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியநிலையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் அரசாங்கத்தின் கூட்டுப்பொறுப்பை ஏற்பதற்கு பதில் அதனை விமர்சிப்பவர்களுடன் இணைந்து செயலாற்றுவது கடினம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான அமைச்சர்களை பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனவும் அவர் ஜனாதிபதி, பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் அரசாங்கத்தை விமர்சிக்கும் அமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் பயனில்லை எனவும் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தெரிவித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.