மிருக தனமான பாலியல் கொடுமை செய்த கணவன் ; ரத்தக் காயங்களுடன் ரிதன்யாவின் பூதவுடல்
மகளின் கணவர் இயற்கைக்கு மாறான உறவுக்கு வற்புறுத்தியதாக, அவருடைய தாய் பேட்டியளித்துள்ளார்.
திருப்பூர், அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவருடைய மகள் ரிதன்யா (27). இவருக்கும் ஜெயம் கார்டன் பகுதியை சேர்ந்த கவின்குமார் என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
அப்போது வரதட்சணையாக 300 பவுன் நகை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், 500 பவுன் வாங்கி வா என கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் ரிதன்யாவை கொடுமை செய்து வந்துள்ளனர்.
இதனை ரிதன்யா பல முறை தனது பிறந்த வீட்டில் தெரிவித்தும் தீர்வு கிடைக்காததால் தற்கொலை செய்துக்கொண்டார்.
ரிதன்யாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சித்ரா தேவியின் உடல்நிலையைக் காரணம் காட்டியதால் அவர் இன்னும் கைது செய்யப்படாமல் உள்ளார். இந்நிலையில், இந்த வழக்கு குறித்து ரிதன்யாவின் தாய் ஜெயசுதா கூறுகையில்,
"ரிதன்யா ஒரே பெண் என்பதால் அவரைச் செல்லமாக வளர்த்தோம். கவின்குமாரின் குடும்பம் பாரம்பரியமான குடும்பம் என்பதால், நகை, கார், பணம் எனச் செலவழித்து ஆடம்பரமாகத் திருமணம் செய்தோம். ஆனால், சைக்கோபோல கவின்குமார் ரிதன்யாவைத் துன்புறுத்தியுள்ளார்.
என் மகளை இயற்கைக்கு மாறான உறவுக்குக் கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் ரிதன்யாவுக்குப் பல இடங்களில் ரத்தக் காயங்கள் இருந்தன.
இந்தத் துன்புறுத்தல் குறித்துத் தனது மாமியாரிடம் ரிதன்யா சொன்னபோதுகூட, 'அவன் அப்படித்தான், அனுசரித்துப் போ' எனச் சொல்லியிருக்கிறார்.
எங்களிடம் கூட சொல்லாமல், தாயைப்போல் மாமியாரை நினைத்ததால்தான் அவரிடம் சொன்னார். ஆனால், அவர் மகனைக் கண்டிக்காமல் எப்படிச் சொல்லியிருக்கிறார் பாருங்கள்.
எனது நிலை எந்தத் தாய்க்கும் வரக் கூடாது. ஆண் பிள்ளைகளுக்கு நல்லதைக் கற்றுக்கொடுங்கள். வசதி வாய்ப்பு பார்க்காமல் நல்ல பையனுக்குத் திருமணம் செய்து கொடுங்கள்" என கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.