அதிகாலையில் தீப்பிடித்து எரிந்த வீடு ; இளம் பெண் ஒருவர் பலி
கொட்டாவ, ருக்மல்கம வீதி, விஹார மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் தனியாக இருந்த இளம் பெண் ஒருவர், உடலில் தீப்பிடித்ததில் உயிரிழந்துள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (13) அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 வயது இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவரது உடல் முற்றிலுமாக எரிந்துவிட்டதாகவும், வீட்டின் சொத்து மற்றும் கூரைக்கு சேதம் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்த சிறுமியின் தாயாரும் இரண்டு சகோதரர்களும் வெசாக் தோரணங்களை பார்ப்பதற்காக வீட்டிலிருந்து வௌியே சென்றிருந்த போதே, இவர் தீ விபத்துக்கு இலக்காகி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, மேலும் நுகேகொடை குற்றப்பிரிவு அதிகாரிகள் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.