கன்னியா வெந்நீரூற்றின் வரலாறு மாற்றப்படுவதாக அகில இலங்கை இந்து மாமன்றம் கவலை
கன்னியா வெந்நீரூற்றின் வரலாற்றை மாற்றியமைப்பது கண்டு நாம் மிகுந்த வேதனை அடைகிறோம் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் கன்னியா வெந்நீரூற்று தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, கன்னியா வெந்நீரூற்று தொடர்பான செய்தி சைவத் தமிழ் மக்களுக்குப் பேரதிர்ச்சியை தருவதாகும்.
கன்னியா வெந்நீரூற்றில் இருந்த விநாயகர் ஆலயம், சிவனாலயம், சிவனடியார் மடம் ஆகியன அழிக்கப்பட்டு, தொல்லியல் திணைக்களம் தற்போது கன்னியா வெந்நீரூற்றின் வரலாற்றை மாற்றியமைப்பது கண்டு நாம் மிகுந்த வேதனை அடைகிறோம்.

ஏற்கனவே இந்நாட்டின் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் பலரிடம் இவ்விடயம் தொடர்பாக முறையிட்டுள்ளோம். தயவுசெய்து சைவத் தமிழர்களின் வரலாற்றை மாற்றி அமைக்காதீர்கள்.
கன்னியா வெந்நீரூற்றை பொறுத்தவரை சைவத் தமிழர்களின் தொன்மை வரலாற்றின் சின்னம் எனலாம். இத்தகைய வரலாற்றை யாரும் மறைக்க முடியாது.
சைவ மக்களின் மிகப்பெரிய அடையாளச் சின்னமாக விளங்கும் கன்னியா வெந்நீரூற்றை போர்ச்சூழலைப் பயன்படுத்தி பௌத்தமயமாக்க முனைவதும் வேதனை தரும் செய்தியாகும்.
தொல்லியல் திணைக்களம் சைவ அடையாளங்களை மாற்றி வேற்று மதத்தவரின் அடையாளங்களை நிலைநிறுத்த முனைவதும் மகா துரோகமான விடயம். இலங்கையின் ஜனாதிபதி இவ்விடயத்தில் உடன் அக்கறை செலுத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று சைவ மக்கள் சார்பில் நாம் அன்போடு வேண்டுகின்றோம்.
கன்னியா வெந்நீரூற்றுச் சூழலை சைவ சூழலிலிருந்து சைவ மக்களின் அடையாளங்களை தொடர்ந்து முற்றாக அழிப்பதும் அங்கே இருந்த வரலாற்று தடயங்களை மாற்றி அமைப்பதும் மிகுந்த வேதனை தருகிறது.

கன்னியா வெந்நீரூற்றில் வழிபாடு செய்த விநாயகர் ஆலயத்தை முற்றாக அழித்துவிட்டு அந்த விநாயகர் ஆலயம் இருந்தது, பௌத்த அடையாளம் உடைய இடம் என்று நீண்ட நாட்களாக ஆலயத்தை கட்ட அனுமதிக்காது காலம் கடத்துவது மிகுந்த வேதனைக்குரியது.
தற்போது கன்னியா வெந்நீரூற்று சூழலையே மாற்றி அமைக்கும் முயற்சி இலங்கை வாழ் சைவ மக்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது.
எனவே இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதியும் தொல்லியல் திணைக்களத்தை சார்ந்தவர்களும் சகல அரசியல் தலைவர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைவ மக்களின் சார்பில் நமது வேண்டுதல் விடுக்கின்றோம் என்றுள்ளது.