ஒரு தீப்பெட்டியால் நேர்ந்த கொடூரம் ; இளைஞர் கத்தியால் குத்திக்கொலை
இந்தியா டெல்லியில் சிகரெட் பற்ற வைக்க தீப்பெட்டி தர மறுத்த இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் டெல்லியின் கேசவ்புரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
கேசவ்புரம் பகுதியைச் சேர்ந்த புவனி (30) என்பவர் தனது நண்பரான ஆயிஷ் ராமுடன் அப்பகுதியில் உள்ள மதுபானக் கடைக்கு சென்றுள்ளார்.

இதன்போது, மதுபானக் கடைக்கு அருகில் நின்றுகொண்டிருந்த சில இளைஞர்கள் சிகரெட் பற்ற வைப்பதற்காக புவனியிடம் தீப்பெட்டி கேட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், புவனி தீப்பெட்டியை வழங்க மறுத்துள்ளார்.
இதனால் அவருக்கும் குறித்த இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த இளைஞர்கள் புவனி மற்றும் அவரது நண்பர் ஆயிஷ் ராம் ஆகிய இருவரையும் கத்தியால் சரமாரியாக குத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் இருவரும் படுகாயமடைந்தனர். சம்பவத்தைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.
அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், புவனி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணையின் அடிப்படையில் நரேஷ், தருன் உள்ளிட்ட மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.