ஜனாதிபதியை சந்தித்த அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலக பிரதானிகள்
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலக குழுவினர் வியாழக்கிழமை (11) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினர்.
இலங்கையிலிருந்து அமெரிக்கா இறங்குமதி செய்யும் பொருட்கள் மீதான தீர்வை வரி குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழுவைப் பாராட்டிய அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் குழு, இலங்கை இதுவரை அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றத்தைப் பாராட்டியது.
இலங்கையின் பொருளாதார நடவடிக்கை
இதுவரையிலான இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் (USTR) வழங்கிய ஆதரவு மற்றும் எதிர்காலத்தில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்தப்படவுள்ள வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கை என்பது மீண்டுவரும் ஒரு சிறிய பொருளாதாரத்துடன் கூடிய நாடு என்பதையும், சிறியதொரு வெளிப்புற தாக்கம் கூட இலங்கையின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் ஜனாதிபதி, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
இந்த அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அனைத்து தீர்மானங்களின் போதும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துவது முக்கியம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.