பிள்ளைகளின் ஆளுமைக்கு பாதிப்பு ; சரீர தண்டனைக்கு எதிராக எச்சரிக்கை
சரீரத் தண்டனையை ஒழிப்பதற்கான சர்வதேச தினமான ஏப்ரல் 30 அன்று, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விடுத்துள்ள செய்தியில், சரீரத் தண்டனை பிள்ளைகளின் ஆளுமையில் குறுகிய கால மற்றும் நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது.
பிள்ளைகளை ஒழுக்கப்படுத்துவதற்காகச் சரீரத் தண்டனையைப் பயன்படுத்துவது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அதிகார சபையின் தலைவர் பிரீத்தி இனோகா ரணசிங்க தெரிவித்துள்ளார்.
பெற்றோர்கள், பெரியோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல தசாப்தங்களாகப் பிள்ளைகளை ஒழுக்கப்படுத்துவதற்காகப் பல்வேறு சரீரத் தண்டனை முறைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால், பிள்ளைகளுக்கு வீட்டிலோ அல்லது பாடசாலையிலோ சரீரத் தண்டனை வழங்குவது ஒரு சாதாரண விடயமாக மாறிவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
1989 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கையின் 19வது பிரிவில், பிள்ளைகள் அனைத்து வகையான துஷ்பிரயோகங்களிலிருந்தும் கணிப்புகளிலிருந்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை 1990 ஆம் ஆண்டு முதல் இந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளது.
இலங்கையின் அரசியலமைப்பின் 11வது பிரிவும், எந்தவொரு நபரும் சித்திரவதைக்கோ, கொடூரமான, அமானுஷ்ய அல்லது இழிவான சிகிச்சைக்கோ அல்லது தண்டனைக்கோ உட்படுத்தப்படக் கூடாது என்ற அடிப்படை உரிமையை உறுதிப்படுத்துகிறது.
தண்டனைச் சட்டக்கோவையின் 308 (அ) பிரிவு மற்றும் கல்வி அமைச்சு விடுத்துள்ள சுற்றறிக்கைகளும், பிள்ளைகளை ஒழுக்கப்படுத்துவதற்காகச் சரீரத் தண்டனையையோ அல்லது உளவியல் ரீதியான துன்புறுத்தலையோ பயன்படுத்தக் கூடாது என்று வலியுறுத்துகின்றன.
சிறுவர்களுக்குப் பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதற்காக 2024 ஆம் ஆண்டு பொகோட்டாவில் நடைபெற்ற முதலாவது உலக மாநாட்டில் இலங்கை வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்று, சரீரத் தண்டனையைத் தடை செய்வதாகும்.
பாடசாலைகளில் நேர்மறையான ஒழுக்க நெறிகள் குறித்து ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிப்பதற்கும் இலங்கை ஒப்புக்கொண்டுள்ளது.
சரீரத் தண்டனை என்பது சிறுவர்களுக்கு இழைக்கப்படும் ஒரு சரீர துஷ்பிரயோகம் என்று அதிகார சபை வலியுறுத்தியுள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்குக் கிடைக்கும் முறைப்பாடுகளில், சரீர துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் இரண்டாவது இடத்தில் உள்ளன.
வருடத்திற்கு 2000 முதல் 2500 வரையான முறைப்பாடுகள் பதிவாகின்றன.