மலையக பாடசாலை மாணவர்களுக்கான மகிழ்ச்சித் தகவல்!
பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் திறன் வகுப்பறைகளை நிறுவுவதற்கான முன்னோடித் திட்டத்துக்கு நிதியுதவியை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், இரண்டு வருடங்களில் நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பெருந்தோட்டப் பாடசாலைகளில் உயர்தர வகுப்புக்களுக்காக 60 திறன் வகுப்பறைகள் நிறுவப்படவுள்ளன.
குறித்த முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தேசிய பெறுகை திணைக்களத்தின் விதந்துரைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, குறித்த திட்டத்துக்கான செலவு 526.20 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், 2024 ஆம் ஆண்டுக்காக 310 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சுக்கும் இடையில் ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை கையெழுத்திடுவதற்கு அனுமதி கோரி பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.