தமிழர் பகுதியில் கசிப்பு வியாபாரிக்காக பெண்கள் உள்ளிட்ட குழு அடாவடி ; இறுதியில் பொலிஸாரின் அதிரடி
மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதேசத்தில் கசிப்பு வியாபாரியை கைது செய்ய முற்பட்ட பொலிஸாரை தாக்கி கசிப்பு வியாபாரியை கைது செய்ய விடாது தடுத்து கைகலப்பில் ஈடுபட்டு வியாபாரியை தப்பியோட வைத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக 3 பெண்கள் உட்பட 6 பேரை நேற்று (18) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள நரிப்பு தோட்டம் பிரதேசத்தில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வீடு ஒன்றை சம்பவ தினமான சனிக்கிழமை (17) மாலை 4.30 மணியளவில் பொலிஸார் முற்றுகையிட்டு வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவரை கைது செய்ய முயற்சித்துள்ளனர்.

பொலிஸாரிடம் அடாவடி
இதில் அவரின் உறவினர்களான பெண்கள் உட்பட்ட குழுவினர் பொலிஸாரை தள்ளி வீழ்த்தி தடுத்து கைகலப்பில் ஈடுபட்டதையடுத்து வியாபாரி அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 15 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டதை அடுத்து பொலிஸார் அவர்களை வீடியோ படம் எடுத்துவிட்டு அங்கிருந்து விலகிச் சென்றனர்.
இந்த நிலையில் பொலிஸாருடன் கைகலப்பில் ஈடுபட்ட ஒருவர் அங்கிருந்து கரடியனாறு பகுதிக்குள் தப்பியோடிவிட்டார். அவரை கரடியனாறு பொலிஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து பொலிஸாருடன் கைகலப்பில் ஈடுபட்டு கடமையை செய்ய விடாது தடுத்த மற்றும் சட்டவிரோத கசிப்பு வியாபாரத்துக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டுகளின் கீழ் 3 பெண்கள் உட்பட 5 பேரை நேற்று (18) கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.