எரிபொருள் விலை குறைப்பு போதாது ; QR முறையை உடனே நீக்குங்கள் ; ரவி கோரிக்கை
எரிபொருட்கள் தற்போது தட்டுப்பாடின்றி கிடைக்கப்பெறுவதால், கியூஆர் முறையை அரசாங்கம் நீக்க வேண்டும்.
அதேநேரம் எரிபொருட்களுக்கான விலை குறைப்பு போதுமானதல்ல என புதிய ஜனநாயக முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், உலக சந்தையில் தற்போது எரிபொருட்களின் விலை குறைவடைந்துள்ள வீதத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் அரசாங்கத்தின் விலை குறைப்பு போதுமானதாக இல்லை.
ஏனெனில் உலக சந்தையில் விலை அதிகரிக்கும்போதெல்லாம் எமது நாட்டிலும் அதற்கு நிகராக விலை அதிகரிக்கப்பட்டது. அதனால் தற்போது உலக சந்தையில் விலை குறைவடையும்போது அதற்கு நிகராக விலை குறைவடையவேண்டும்.
அதுதான் நியாயம். ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லை. Maps உண்மையில் எரிபொருள் கொள்வனவு செய்த விலை மற்றும் விற்பனை செய்யும் விலைக்கு மத்தியில் நட்டம் ஏற்படாத வகையில் விற்பனை செய்யுமாறே நாணய நிதியம் அரசாங்கத்துக்கு தெரிவித்திருக்கிறது.
அதனால் அரசாங்கம் தற்போது நாணய நிதியம் தெரிவித்துள்ளதான் பிரகாரம் செய்கிறதா இல்லையா? அவ்வாறு செய்யும்போது முறையற்ற லாபம் பெற்றுக்கொள்ளவும் முடியாது.
அதேநேரம் நட்டப்படவும் முடியாது. இதுதான் சரியான நிலைமை. என்றாலும் சரியான தகவல் எமக்கு சமர்ப்பிக்கப்படாததால், தற்போது உலக சந்தையில் எரிபொருட்களின் விலை குறைவடைந்துள்ள அளவுக்கு இங்கு விலை குறைவடையவில்லை என்றே எமக்கு தெரிவிக்க முடியும் என்றார்.