யாழில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் நன்னீர் மீன்கள்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் மருதங்கேணி பிரதான பாலம் அருகே ஆற்றங்கரையின் இருபுறங்களிலும் பெருமளவான நன்னீர் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது நிலவும் அதீத வெப்பநிலை காரணமாகவே மீன்கள் இறந்து கரை ஒதுங்கியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக மருதங்கேணி பிரதான பாலம் பகுதியில் பல தொன் எடையிலான நன்னீர் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி காணப்படுகின்றன.
இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதியால் பயணிக்கும் மக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
வடமராட்சி கிழக்கு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்னீர் மீன்பிடித் தொழிலை தமது பிரதான வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள நிலையில், மீன்கள் பெருமளவில் இறந்து கரை ஒதுங்கியுள்ளமை அவர்களின் வாழ்வாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமது பகுதியில் இடம்பெற்றதில்லை எனவும், தங்களது வாழ்நாளில் முதன்முறையாக இவ்வாறான இயற்கைக்கு மாறான சம்பவத்தை அவதானிப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.