மனைவி பணம் அனுப்பாததால் பிள்ளைகளை தாக்கிய தந்தை ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
பலாங்கொடை – பின்னவல பகுதியில், தனது இரண்டு பிள்ளைகளைத் தாக்கிய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மத்திய கிழக்கு நாட்டில் தொழில் நிமித்தம் சென்றுள்ள தனது மனைவி பணம் அனுப்பவில்லை என்றும், தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிப்பதில்லை என்றும் கூறி, குறித்த நபர் தனது இரண்டு பிள்ளைகளையும் தாக்கியுள்ளார்.

பின்னர், அந்தத் தாக்குதலை காணொளியாகப் பதிவு செய்து தனது மனைவிக்கு அனுப்பியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய தந்தை ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட தந்தையை எதிர்வரும் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான இரண்டு சிறார்களும் உடனடியாக மீட்கப்பட்டு, மேலதிக சிகிச்சை மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுக்காக பலாங்கொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான முழுமையான பின்னணியைக் கண்டறிவதற்காக காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.