இங்கிலாந்து அணிக்கு மீண்டும் வெற்றி ; இலங்கையை வீழ்த்திய இங்கிலாந்து அணி
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.
இதனூடாக, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. கண்டி - பல்லேகலை மைதானத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணிசார்பில் பவன் ரத்நாயக்க 40 ஓட்டங்களையும், கமில் மிஷார 36 ஓட்டங்களையும், பெத்தும் நிஸ்ஸங்க 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் ஜொப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக கைப்பற்றினார்.
இந்தநிலையில், 190 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி 7.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 57 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.
பின்னர், போட்டி 17 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு, டக்வர் லூயிஸ் முறையில் வெற்றி இலக்கு 168 ஓட்டங்களாக மாற்றப்பட்டது.

அதற்கைமய, போட்டி இலங்கை நேரப்படி இரவு 10.40 க்கு மீள ஆரம்பமான நிலையில், புதிய இலக்கை நோக்கில் மீண்டும் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 16.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து (173) வெற்றி இலக்கை கடந்தது.
இங்கிலாந்து அணி சார்பில் அதிகபடியாக டொம் பெண்டன் 54 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 39 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஹரி புரூக் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணியின் மதீஷ பத்திரண அதிகபட்சமாக 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.