சுகாதாரத்துறைக்கு ரூ.100 மில்லியன் ஒதுக்கீடு ; மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர்
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி – ஓந்தாச்சிமடம் கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலையின் புதிய விடுதி கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டை சரியான தலைமைத்துவத்துடன் முன்னெடுத்துச் செல்வதாக தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் வரவு–செலவுத் திட்டத்தில் சுமார் 600 மில்லியன் ரூபாய் முன்மொழியப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான தொகையைக் கொண்ட வரவு–செலவுத் திட்டத்தை முன்வைத்த இலங்கையின் முதலாவது பிரதேச சபையாக தமது சபை திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதேச மக்களின் சுகாதாரத் தேவைகளை மேம்படுத்தும் நோக்கில், குறித்த வரவு–செலவுத் திட்டத்தில் சுமார் 100 மில்லியன் ரூபாய் சுகாதாரத்துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தவிசாளர் தெரிவித்தார்.

இதேவேளை, ஓந்தாச்சிமடம் கடற்கரைப் பகுதியை பாசிக்குடா போன்ற முக்கிய சுற்றுலாத்தலமாக அபிவிருத்தி செய்து அழகுபடுத்துவதற்காக 18 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமைக்கு கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
ஓந்தாச்சிமடம் கடற்கரையை கிழக்கு மாகாணத்தின் சிறந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக உருவாக்குவதற்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஜனாதிபதி விஜயம் செய்திருந்தபோது, சுகாதாரத்துறையை மேம்படுத்துவதுடன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அதிகளவில் ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்ததாகவும் வினோராஜ் தெரிவித்தார்.
பொது இடங்களில் வெற்றிலை எச்சில் துப்புவதைத் தடுப்பதிலும் பிரதேச சபை முன்னுதாரணமாக செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் ஒரு பகுதியாக, கடந்த மே மாதம் 12ஆம் திகதி பொது இடங்களில் வெற்றிலை எச்சில் துப்பியதாகக் கூறப்படும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக சபையின் சுகாதார அதிகாரி ஊடாக களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதாகவும், அதில் 1,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அணுக வேண்டும் எனவும் தவிசாளர் வலியுறுத்தினார்.
தமிழ் மக்களின் தேவைகளை எந்த அரசாங்கம் சரியான முறையில் நிறைவேற்றுகின்றதோ, அந்த அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு தாம் ஆதரவளிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டை சரியான தலைமைத்துவத்துடன் முன்னெடுத்துச் செல்லும் அரசாங்கத்தின் கீழ், தமது பிரதேச மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக கட்டமைப்புடன் செயற்படுவதே தமது நோக்கம் என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் மேலும் தெரிவித்தார்.