பூமியையே உலுக்கப் போகும் எல் நினோ ; விஞ்ஞானிகள் எச்சரிக்கை
உலகம் முழுவதும் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்வதற்கும், கடுமையான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் காரணமாக அமையும் ஒரு முக்கிய இயற்கை நிகழ்வான 'எல்-நினோ' (El-Nino) நிலை தற்போது அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய மற்றும் கிழக்கு பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை சாதாரண அளவை விட 0.5 டிகிரி செல்சியஸால் அதிகரித்துள்ளதாக அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பு (NOAA) அறிவித்துள்ளது.
இது எல்-நினோ நிலையாகக் கருதுவதற்குத் தேவையான வரம்பைத் தாண்டியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்முறை எல்-நினோ நிலை மிகவும் வலுவடைந்து, "கடுமையான எல்-நினோ" நிலையாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது வரலாற்றில் பதிவான மிகக் கடுமையான எல்-நினோ நிகழ்வுகளில் ஒன்றாக மாறக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
மனித செயல்பாடுகளால் பல தசாப்தங்களாக ஏற்பட்டு வரும் புவி வெப்பமயமாதலுடன் இந்த நிலையும் இணைவதால், வரும் ஓராண்டு காலம் (பெரும்பாலும் 2027 ஆம் ஆண்டு) வரலாற்றில் அதிக வெப்பம் பதிவாகும் ஆண்டாக மாறக்கூடும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், இந்த நிலைமை காரணமாக உலகம் முழுவதும் காலநிலை வடிவங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் வறட்சி, அதிக மழைப்பொழிவு, வெள்ளப்பெருக்கு, வெப்ப அலைகள் மற்றும் விவசாய உற்பத்தியைப் பாதிக்கும் மோசமான சூழ்நிலைகள் அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமத்திய ரேகை பசிபிக் பிராந்தியத்திற்கு மேலேயுள்ள காற்று வடிவங்களிலும் தற்போது மாற்றங்கள் அவதானிக்கப்பட்டு வருவதாக NOAA அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
கடல் வெப்பநிலை அதிகரிப்பதற்கு வளிமண்டலமும் எதிர்வினையாற்றி வருவதற்கான தெளிவான அறிகுறி இதுவெனக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, வரும் மாதங்களில் உலகின் பல்வேறு பகுதிகளில் மோசமான காலநிலை நிகழ்வுகள் ஏற்படக்கூடும் என சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.