தமிழ்நாடு சட்டமன்றம் கலைப்பு
தமிழக சட்டமன்றம் கலைக்கப்படுவதாக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் அறிவித்துள்ளார். தமிழகத்தின் 16ஆவது சட்டமன்றத்தில் தி.மு.க. அரசு ஆட்சியமைத்த நிலையில், அதன் பதவிக்காலம் தற்போது நிறைவடைந்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றது. தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் வெற்றி பெற்றாலும், ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல்
இதற்காக த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவரும் நிலையில், தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைக்க முழு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
தொடர்ந்து, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை சந்தித்த த.வெ.க. தலைவர் விஜய், தமிழகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆட்சியமைப்பதற்கு ஆளுநர் அழைப்பு விடுத்த பிறகு, தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்பார்.
அரசியல் சாசன முறைப்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடைகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் 17ஆவது சட்டமன்றம் உருவாக்கப்பட்டு புதிய அரசு அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.