கச்சதீவிற்கு வந்த இந்தியர்களிடம் இலங்கை கடற்படையினர் செய்த முகம்சுழிக்கும் செயல்
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழகக் கச்சதீவு பாரம்பரிய திருப்பயணக் குழு ஒருங்கிணைப்பாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கச்சதீவு திருவிழா
"திருவிழாவிற்காக நாங்கள் கச்சதீவிற்குள் நுழைந்த போது, அங்கிருந்த கடற்படையினரும் பொலிஸாரும் வரம்பு மீறிச் செயற்பட்டனர்.
பக்தர்களுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினர். இந்தியத் தூதரகத்துடன் தொடர்பு கொள்ள முயற்சித்தும், அங்கிருந்த பக்தர்களின் நிலைமையைக் கருத்தில் கொண்டு அமைதியாக உள்ளே சென்றோம்.
திருவிழா முடிந்து திரும்பும் போதும் இதே நிலை நீடித்தது. அங்கிருந்த இளம் கடற்படை அதிகாரி ஒருவர் தமிழக இளைஞர்களுடன் மோதலில் ஈடுபடும் வகையில் நடந்து கொண்டார்.
கடற்படை அதிகாரி ஒருவர் இளைஞர்களைத் தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் திரண்டு நின்று, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தண்டனை வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கடற்படை உயர் அதிகாரி ஒருவர் அங்கு வந்து நிலைமையைச் சீர்செய்து, மக்களை அமர அனுமதித்தார்.
பக்தர்கள் உள்ளே நுழைய நான்கு வழிகள் மட்டுமே காணப்படுகின்றன. பெருமளவான பக்தர்கள் வரும் போது அதனைச் சமாளிக்க போதுமான வசதிகள் இல்லை. அதேபோல, திருவிழா முடிந்து முக்கிய பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் செல்லும்வரை, பொதுமக்கள் பல மணி நேரம் தடுத்து வைக்கப்படுகின்றனர்.
சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் 10 முதல் 12 மணி நேரம் வரை கடும் வெயிலில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தெய்வாதீனமாக எவ்வித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்தார்.