சிவனொளிபாத மலையில் இருந்து கீழே குதித்த இளைஞன் தொடர்பில் வெளியான தகவல்!
சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற நிலையில் மலையில் உச்சியில் இருந்து கீழே குதித்து காணாமல் போயிருந்த இளைஞன் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான தினேஷ் ஹேமந்த என்ற இளைஞனே இரு பெண்களுடன் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற நிலையில் கீழே குதித்து மாயமான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
சிவனொளிபாதமலை வனப்பகுதிக்கு அருகில் உள்ள நல்லதண்ணி - மரே தோட்டத்தின் ராஜமலை பகுதியில் இன்றையதினம் (24-04-2024) காலை இளைஞன் கண்டுபிடிக்கப்பட்டு தோட்ட தொழிலாளர்கள் குழுவினால் நல்லதண்ணி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அங்கு, பொலிஸ் அதிகாரிகள் இளைஞனை சிகிச்சைக்காக மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதித்து பின்னர் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இளைஞரைத் தேடுவதற்காக மூன்று நாட்களாக விசேட நடவடிக்கையை மேற்கொண்டு பின்னர் அதனை கைவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.