பேருந்து நடந்துனரை மறந்து விட்டுச்சென்ற சாரதி; கொழும்பில் இப்படியொரு சம்பவம்
கொழும்பு பகுதியில் வியாழக்கிழமை (23) காலை மேற்கொள்ளப்பட்ட ஒரு சோதனையின் போது, நடத்துனரை ஏற்றிச் செல்லாமல் பேருந்து புறப்பட்டுச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் பம்பலப்பிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மற்றொரு பேருந்தில் ஏற்றிச் செல்ல ஏற்பாடு
பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தல் மற்றும் பயணச்சீட்டு வழங்காமை போன்ற விதிமீறல்களைக் கண்டறியும் நோக்கில் தனியார் பேருந்துகள் இதன்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
சோதனையின் போது, வீதியில் தனியாக நின்றிருந்த நடத்துனரை அதிகாரிகள் விசாரித்தபோது, "பேருந்து என்னை விட்டுச் சென்றுவிட்டது... நான் தான் அந்தப் பேருந்தின் நடத்துனர்" என்று கூறியுள்ளார்.
முதலில் அவரை முச்சக்கர வண்டி ஒன்றில் செல்லுமாறு வீதிப் போக்குவரத்து பரிசோதகர் அறிவுறுத்திய போதிலும், பின்னர் அவரை மற்றொரு பேருந்தில் ஏற்றிச் செல்ல நடத்துனர் ஏற்பாடு செய்தார்.
சம்பந்தப்பட்ட பேருந்தின் சாரதி அவசரமாகப் பேருந்தைச் செலுத்தியதால், நடத்துனரை ஏற்றிக்கொள்ள மறந்து சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த சோதனையின் போது 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் பரிசோதிக்கப்பட்டன. அவற்றில் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட சுமார் 70 பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தனியார் பேருந்து சேவையின் ஒழுக்கம் மற்றும் முகாமைத்துவம் குறித்து இச்சம்பவம் கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், பயணிகள் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தவிர்க்கவும் முறையான சேவையை உறுதிப்படுத்தவும் அதிகாரிகள் தொடர்ச்சியான சோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.