விளை நிலத்தில் கிடைத்த வைரக்கற்கள்; போட்டி போட்டு ஏர் உழும் விவசாயிகள்!
இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் விவசாயி ஒருவரின் விளை நிலத்தில் வைரக்கல் கிடைத்துள்ளதையடுத்து, அப்பகுதியிலுள்ள மற்ற விவசாயிகளும் தங்களது நிலத்தை போட்டி போட்டு உழுது வைர க்கற்களைத் தேடி வருகின்றனர்.
இந்திய ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் துக்கிலியை சேர்ந்த விவசாயி ஒருவர் நேற்று முன்தினம் தனது நிலத்தை உழுது கொண்டு இருந்தபோது நிலத்தில் புதைந்து இருந்த வைரக்கல் ஒன்று மேலே வந்து ஜொலித்துள்ளது. இதனைக் கண்டு ஆச்சரியமடைந்த விவசாயி நகைக் கடைக்கு வைரக் கல்லை எடுத்துச் சென்று விசாரித்துள்ளார்.
அப்போது நகை வியாபாரி ரூ 2 லட்சத்திற்கு விலை போகும் என தெரிவித்துள்ளார். அதற்கு விவசாயி ரூ.5 லட்சம் கொடுத்தால் வைரக்கல்லை விற்பனை செய்வதாக தெரிவித்துவிட்டு வைரக்கல்லை வீட்டிற்கு கொண்டு சென்றதுடன், இதுகுறித்து ஏனையவர்களிடம் விவசாயி தெரிவித்துள்ளார். பக்கத்து நிலத்தை சேர்ந்த விவசாயிகளும் தங்களது நிலத்தை உழுதுள்ளனர்.
அப்போது மேலும் 2 விவசாயிகளுக்கு வைரக்கல் கிடைத்துள்ளது. இந்நிலையில் விவசாய நிலத்தில் வைரக்கல் கிடைத்த தகவல் ஊர் முழுவதும் பரவியுள்ளதால் நிலம் வைத்திருந்த அனைத்து விவசாயிகளும் தங்களது விவசாய நிலங்களை உழுது வருகின்றனர்.
கடந்த வாரம் கர்னூல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தபோது வானத்தில் இருந்து வைரக்கற்கள் விவசாய நிலத்தில் விழுந்து மண்ணில் புதைந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் விவசாய நிலத்தில் வைரக்கல் கிடைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.