பெண்ணிற்கு மோசடி செய்த குடும்பம் ; 2.2 மில்லியன் தங்க நகைகளைத் திருட்டு
புத்தளம் ஆனமடுவ பகுதியில் பெண்ணொருவரை ஏமாற்றி புதையல் பெற்றத் தருவதாக கூறி சுமார் 2.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைத் திருடியதாக சந்தேகத்தின் பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் ஆகியோர் பல்லம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிங்கிரியவின் ஊரபொத்த பகுதியில் வசிக்கும் 67 வயது கணவர், 48 வயது மனைவி மற்றும் அவர்களின் மகள் எனக் கூறப்படும் 22 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தை எதிர்கொண்ட பெண் சுமார் 10 ஆண்டுகளாக டுபாயில் பணிபுரிந்து வந்துள்ள நிலையில், அவர் இரண்டு பிள்ளைகளின் தாயாவார்.
அந்த பெண்ணின் பல்லமவின் கம்மனதலுவ பகுதியில் உள்ள மற்றொரு காணியில் வாடகைக்கு வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவர், மனைவி மற்றும் மகள் ஆகியோர் இந்தத் திருட்டைச் செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் கம்மனதலுவ வீட்டில் தங்கியிருந்தபோது, வீட்டிற்குப் பாதுகாப்பு பூஜை செய்வதாக கூறி, அந்தப் பெண்ணிடமிருந்து பல சந்தர்ப்பங்களில் சுமார் 500,000 ரூபாயைப் பெற்றுள்ளனர்.
திருட்டில் ஈடுபட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணே பாதுகாப்பு பூஜை செய்ததாகவும் அதன்படி ஏற்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் அவர்கள் மீது அவருக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நம்பிக்கையைப் பெற்ற குடும்பம், ஏமாற்றப்பட்ட பெண் வசித்து வந்த அடிகம வெட்டியகல்வலவில் உள்ள வீட்டிற்கு வந்து, அந்த காணியில் புதையல் இருப்பதாகவும், அதை மீட்டெடுக்க முடியும் என்றும் அவரிடம் கூறியுள்ளனர்.
இருப்பினும், அந்தப் பெண் ஆரம்பத்தில் இந்த திட்டத்திற்கு தனது தயக்கத்தை வெளிப்படுத்தியிருந்த போதும், சந்தேக நபர்கள் புதையலை மீட்டெடுக்க அவளை வற்புறுத்த பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
இதன்போது புதையலை மீட்டெடுப்பதற்கு முன்பு, பெண்ணின் அனைத்து தங்க நகைகளையும் புதைக்க வேண்டும் என்றும், இது அவரது முன்னிலையில் செய்யப்படும் என்றும் தாயான பெண் சந்தேகநபர் அந்த பெண்ணிடம் தெரிவித்திருந்தார்.
அவர்கள் தனது வீட்டை வாடகைக்கு எடுத்ததால், அவர்களை சந்தேகிக்காமல், அந்தப் பெண் டுபாயில் தனது வேலை செய்து வாங்கிய சுமார் 9 பவுண் கொண்ட தங்க நெக்லஸ், 2 பதக்கங்கள் மற்றும் 2 தங்க வளையல்களை வெள்ளைத் துணியில் சுற்றி அவர்களுக்குக் கொடுத்துள்ளார்.
சந்தேக நபர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தங்க நகைகளை அந்தப் பெண்ணின் முன் புதைத்தனர்.
தங்க நகைகளை புதைத்த பிறகு அந்தப் பெண் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது, வீட்டின் உரிமையாளரான பெண்ணிடம், வீட்டிற்குச் சென்று, சுத்தமான தண்ணீரில் மஞ்சள் நீரை தயாரித்து கொண்டு வருமாறு கூறி, சந்தேகநபரான பெண் அனுப்பி வைத்தார்.
பின்னர், வீட்டின் உரிமையாளரான பெண் அதைத் தயாரித்து கொண்டு வந்த பிறகு, அதை அந்த இடம் முழுவதும் தெளித்து சடங்குகளைச் செய்தார்.
அந்த இடத்தில் ஒரு பூதம் இருப்பதாகவும், அது அனுப்பப்படும் வரை புதைக்கப்பட்ட தங்க நகைகளை மீட்டெடுக்கக் கூடாது என்றும் கூறி அவர்கள் வெளியேறினர்.
இருப்பினும், வீட்டின் உரிமையாளர் பெண் புதைக்கப்பட்ட தங்க நகைகளை மீட்டெடுக்க பெண் சந்தேக நபருக்கு பல முறை அழைப்பு விடுத்த போதும், அவரால் அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை.
அதன்படி, ஏற்பட்ட சந்தேகத்திற்கு அமைய, நேற்று அந்த இடத்தைத் தோண்டி தங்க நகைகளை மீட்க பெண் முயன்ற போது, அங்கு புதைக்கப்பட்டிருந்தது தங்க நகைகளை அல்ல என்பதையும், தாயத்து உள்ளிட்டவையே அங்கு புதைக்கப்பட்டிருந்தமையும் அவரால் காணமுடிந்துள்ளது.
அதன் பிறகு, சம்பவத்தை எதிர்கொண்ட பெண், பல்லம பொலிஸில் சம்பவம் குறித்து முறைப்பாடி அளித்தார். இதற்கமைய அந்த சந்தேக நபர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் பல்லம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.