அலி கமேனியின் இறுதிச்சடங்கில் இலங்கை பிரதி சபாநாயகர், ரவூப் ஹக்கீம் பங்கேற்பு; உலகை உலுக்கிய புகைப்படம்
அமெரிக்க - இஸ்ரேல் கூட்டு தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வில் இலங்கை சார்பாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இவர்களைத் தவிர சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் அரச பிரதிநிதிகள் வருகை தரவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

30க்கும் மேற்பட்ட நாடுகளின் பட்டியல்
இதற்கமைய, இந்த விசேட நிகழ்வில் கலந்துகொள்ளும் 30க்கும் மேற்பட்ட நாடுகளின் பட்டியலை அவர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர். ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளும், ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க பிராந்தியங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொள்ளவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், இந்தியா, துருக்கி, துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான், ஈராக், ஜோர்ஜியா ,அர்மேனியா ,ஆப்கானிஸ்தான், ஓமான் ,கத்தார், அசர்பைஜான் ,கிர்கிஸ்தான் ,உஸ்பெகிஸ்தான் ,பங்களாதேஷ், எகிப்து, கசகஸ்தான், கானா, நிகரகுவா, கொங்கோ, செர்பியா ,துனிசியா, லெபனான் ,நமீபியா ,மலேசியா, கியூபா, இலங்கை ,மியான்மர் ,காம்பியா, தாய்லாந்து ஆகிய நாடுகளின் பிரதினிகள் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலகை உலுக்கிய புகைப்படம்
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானில் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த அப்போதைய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெய்னி மற்றும் அவரது குடும்பத்தினரின் இறுதிச்சடங்குகள் 4 மாதங்களின் பின்னர் நேற்று தெஹ்ரானில் ஆரம்பமாகியுள்ளன.

குறித்த தாக்குதலில் கமெய்னியுடன் அவரது மூத்த மகள், மருமகன், மருமகள் மற்றும் 14 மாதப் பேத்தி ஆகியோரும் உயிரிழந்தனர். போர் பதற்றம் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக இவர்களது உடல்கள் இதுவரை குளிரூட்டப்பட்ட ரகசிய அறையொன்றில் பாதுகாக்கப்பட்டிருந்தன.
தற்போது போர்ப் பதற்றம் சற்றுத் தணிந்துள்ள நிலையில், தெஹ்ரான் இமாம் கமேனி கிராண்ட் மொசல்லா வளாகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக உடலங்கள் வைக்கப்பட்டுள்ளன.