காரைதீவு பொலிஸ் நிலையத்தில் குடும்பஸ்தர் மரணம்; இருவர் பணி இடை நிறுத்தம்
அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் இரு பொலிஸ் சார்ஜன்ட்கள் பணி இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற வேளை கடமையில் இருந்த இரு பொலிஸ் சார்ஜன்ட்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன் காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஐ.பி ஜெயரட்ணவிற்கும் உள்ளக விசாரணை மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உயிரிழந்த குடும்பஸ்தர் 65 வயது மதிக்கத்தக்க 6 பிள்ளைகளின் தந்தையான காரைதீவு 1 பிரிவு மாதவி வீதியைச் சேர்ந்த சாமித்தம்பி பாக்கியராசா ஆவார்.இவர் முன்னாள் ஓய்வு பெற்ற நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர் என்பவர் ஆவார்.
சம்பவம் தொடர்பிலான விசாரணையானது கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய , அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிற்கமைய அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி வழிநடத்லில் அக்கரைப்பற்று பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி டந்தநாராயண நெறிப்படுத்தலில் இடம்பெறுவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.