துறைமுக நகரத்தில் இடம்பெற்ற சீன பிரஜையின் மரணம் ; வெளியான மேலும் பல திடுக்கிடும் தகவல்கள்
துறைமுக நகரத்தில் (Port City) கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சீன பிரஜை, கணினி சார்ந்த மோசடிகளில் ஈடுபட்டு சட்டவிரோதமாகப் பணம் ஈட்டிய ஒருவர் என அடையாளங்காணப்பட்டுள்ளதாக கொழும்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த டி சொய்சா தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களில் கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாகச் சமூக ஊடகங்களில் பரவிய தகவல்களின் உண்மை நிலையை விளக்குவதற்காக இன்று (27) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, கடந்த 23ஆம் திகதி நள்ளிரவு துறைமுக நகரத்திற்குள் சீன பிரஜைகள் குழுவிற்கிடையே இடம்பெற்ற சம்பவம் குறித்து முழுமையான விளக்கம் அளிக்கப்பட்டது.

இரு வேறு சீன பிரஜைகள் குழுக்களிடையே கடந்த 23ஆம் திகதி அதிகாலை 3.00 மணியளவில் ஏற்பட்ட மோதல் காரணமாக நபர் ஒருவர் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டிருந்த நிலையில், அவரது சடலம் எஹெலியகொடை பகுதியில் மீட்கப்பட்டிருந்தது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த கொழும்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், சம்பவம் நடந்து சில மணிநேரங்களுக்குள் நாட்டிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற இரு சந்தேகநபர்களைக் கைது செய்ய முடிந்ததாகவும், அவர்களே இச்சம்பவத்தின் முதன்மைச் சந்தேகநபர்கள் என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இச்சம்பவம் தொடர்பாக 08 சந்தேகநபர்கள் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் மூவர் ஏற்கனவே நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களை மீண்டும் நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவத்திற்காக இரண்டு வாயு துப்பாக்கி, ஒரு கையடக்க தொலைபேசி, ஒரு வோக்கி டாக்கி (Walkie-Talkie) மற்றும் சில வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் வேறு பல நாடுகளில் செயற்பட்டு இலங்கைக்கு வருகை தந்தவர்கள் என அடையாளங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்துடனும் சீன அரசாங்கத்துடனும் சரியான ஒருங்கிணைப்புடன் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கொழும்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த டி சொய்சா மேலும் தெரிவித்தார்.