இலங்கை மத்திய வங்கிக்கு தரவுச் சிக்கல் ; பணவீக்க இலக்குகளை எட்டுவதில் சவால்
இலங்கையின் பணவீக்க இலக்குகள் மற்றும் பொருளாதாரக் கணிப்புகள் அனைத்தும், கொரோனா தொற்று மற்றும் 2022 பொருளாதார நெருக்கடிக்கு முந்தைய காலமான 2019ஆம் ஆண்டின் தரவுகளையே இன்னும் தங்கியுள்ளதாக மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரச நிதி பற்றிய குழுவின் (COPF) அண்மைய கூட்டத்தில் இது தொடர்பான விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.
இலங்கையின் பணவீக்கத்தை அளவிடும் 'பொருட்களின் கூடை' (Basket of Goods), 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குடும்ப வருமானம் மற்றும் செலவின ஆய்வின் அடிப்படையிலேயே அமைந்துள்ளதாக மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் சி. அமரசேகர தெரிவித்துள்ளார்.
கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் மக்களின் செலவு முறைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், புதிய ஆய்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய வங்கி நிர்ணயித்த 5 சதவீத பணவீக்க இலக்கை இலங்கை தொடர்ந்து ஆறு காலாண்டுகளாக எட்டவில்லை என அரச நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
ஆகஸ்ட் 2025இல் பணவீக்கம் நேர்மறையான நிலைக்கு வந்தாலும், அது இலக்கை விட 2.6 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.
வட்டி விகிதங்கள் 8.5 சதவீதமாக இருக்கும் போது, பணவீக்க எதிர்பார்ப்பு சதவீதமாக இருப்பது முரண்பாடாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், சரியான இலக்குகளை நிர்ணயிப்பதற்கான மாதிரி ஒன்றை உருவாக்குவதற்கு போதிய தரவுகள் இல்லை. தரவுப் பற்றாக்குறை எமது எதிர்வுகூறல்களைப் பாதித்துள்ளது.
தற்போதுள்ள நிலையில் எம்மால் முடிந்த மிகச்சிறந்த கணிப்பையே வழங்கி வருகிறோம் என மத்திய வங்கியின் நாணயக் கொள்கை வாரிய உறுப்பினர் துஷ்னி வீரகோன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தற்போதைய வட்டி விகிதக் கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி சீராக உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரம், கடன் வழங்கல் மற்றும் கேள்வி ஆகியவை சரியான சமநிலையில் வளர்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய வட்டி விகிதக் கட்டமைப்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், அது நாணயக் கொள்கைக்கு ஏற்பவே அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.