கட்டுநாயக்கவில் கைது ஆபத்து ; ராமநாதன் அர்ச்சுனா மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு
நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, இந்தியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக இலங்கையில் தாம் கைது செய்யப்படக்கூடும் எனக் கூறியுள்ளார்.
அவர் தெரிவிக்கையில், இந்தியாவில் வைத்து வெளியிட்ட கருத்துகள் காரணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Bandaranaike International Airport) வந்திறங்கும் போது தாம் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக அச்சம் வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவரை குறித்து பேசுவது தேசத்துரோகமாக கருதப்படக்கூடும் என்பதால், தமது கருத்துகள் காரணமாக தமது குரல் நிரந்தரமாக முடக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய அவர், வெளிநாட்டவர்களை விட “தொப்புள்கொடி உறவுகளான” தமிழக மக்கள்மீது தான் நம்பிக்கை இருப்பதாகவும், அவர்கள் இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
அத்துடன், தமிழக அரசியல் தலைவர்களான திருமாவளவன் மற்றும் விஜய் ஆகியோர், தமிழ் இனத்திற்கான சர்வதேச நீதிக்காக அரசியல் ரீதியாக செயல்பட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தக் கருத்துகள் சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை பெற்றுள்ளன.