தினமும் காலையில் கற்றாழை ஜூஸில் லெமன் கலந்து குடித்தால் இத்தனை நன்மைகளா?
கற்றாழையைக் கொண்டு ஜூஸ் தயாரித்து குடித்து வந்தால், பல்வேறு நன்மைகளைப் பெறலாம் என எல்லோரும் அறிந்ததே. கற்றாழை ஜூஸை வெறுமனே குடிப்பதை விட, வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸில் கற்றாழையை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இரட்டிப்பு நன்மைகள் கிடைக்கும்.
இப்போது காலையில் எழுந்ததும் லெமன் கலந்த கற்றாழை ஜூஸைக் குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னவென நாம் இங்கு பார்ப்போம்.
செரிமானம் மேம்படும்
கற்றாழையில் உள்ள கலவைகள் செரிமான பிரச்சனைகள் தடுக்கும், அழற்சியைக் குறைக்கும் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும். மேலும் இந்த கற்றாழை ஜூஸை குடித்து வந்தால், இது மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும். இந்த ஜூஸில் சேர்க்கப்படும் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி பித்த நீர் உற்பத்தியைத் தூண்டி செரிமானத்திற்கு நன்மை பயக்கும். வெதுவெதுப்பான நீரில் இந்த ஜூஸைக் குடிக்கும் போது, அது செரிமான நொதிகளைத் தூண்டி செரிமானத்தை சீராக்கும்.
அழற்சி எதிர்ப்பு பண்புகள்
கற்றாழையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், இது உடலினுள் ஏற்பட்டுள்ள அழற்சியைக் குறைத்து, ஆர்த்ரிடிஸ் அல்லது அழற்சிமிக்க குடல் நோய்களில் இருந்து விடுவிக்கும். எனவே ஆர்த்ரிடிஸ் பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஜூஸைக் குடிப்பது மிகவும் நல்லது.
நீரேற்றம்
லெமன் கலந்த கற்றாழை ஜூஸை குடித்து வந்தால், அதில் உள்ள அதிகப்படியான நீர்ச்சத்து, உடல் வறண்டு போகாமல் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளும். உடல் நீரேற்றத்துடன் இருந்தால் தான், உடலுறுப்புக்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும்.
நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்
கற்றாழையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை உள்ளன. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகின்றன. அதுவும் எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் உதவுகின்றன.
உடல் சுத்தமாகும்
இந்த கற்றாழை ஜூஸானது கல்லீரலை சுத்தப்படுத்தி உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும். அதுவும் இந்த ஜூஸில் உள்ள எலுமிச்சை ஒரு நேச்சுரல் டையூரிக்காக செயல்பட்டு, உடலில் இருந்து அதிகப்படியான நீர் மற்றும் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.
எடை இழப்பு
நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவராயின், இந்த கற்றாழை ஜூஸ் நல்ல பலனைத் தரும். ஏனெனில் கற்றாழை உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்க உதவும். மேலும் இதில் உள்ள எலுமிச்சை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், பசியைத் தடுக்கவும் உதவுகிறது.