சுங்க சேவை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கல் ; புதிய நடைமுறை ஒக்டோபரில்
காகிதமற்ற சுங்க அறிக்கை நடைமுறையை (Paperless Customs Declaration Processing System) வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் கையொப்பம் மற்றும் காகிதமற்ற சுங்க அறிக்கை நடைமுறை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (28) பிற்பகல் கொழும்பிலுள்ள SEMA கட்டிட கேட்போர்கூட மண்டபத்தில் நடைபெற்றதுடன், அங்கு கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதியின் செயலாளர் இதனை குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் அரசு சேவை நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் முக்கிய அங்கமாக அரசு சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதை விரைவுபடுத்துவது அவசியமானது சுட்டிக்காட்டிய அவர், புதிய நடைமுறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் சுங்க சீராக்கல் செயல்முறையை மிகவும் திறமையானதாகவும், வேகமாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் மாற்ற முடியும் எனத் தெரிவித்தார்.
டிஜிட்டல் கையொப்பமிட்ட பின்னர் செய்யப்படும் மாற்றங்களை கணினி அமைப்பினால் கண்டறிய முடியும் என்பதால் மோசடிகள் மற்றும் ஊழல்களுக்கான வாய்ப்புகள் குறைக்கப்படும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் கூறினார்.
வர்த்தக அளவீடுகள் அதிகரித்து வரும் பின்னணியில் இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுவதன் காரணமாக எவரது வேலையும் பறிபோகாது என்றும், தொழிலின் தன்மை மாறினாலும் சுங்க சீராக்கல் முகவர்களின் வேலைவாய்ப்புகள் பாதுகாப்பாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
LankaSign டிஜிட்டல் கையொப்பம் மற்றும் ASYCUDA அமைப்பை ஒன்றிணைப்பதன் மூலம் அனைத்து சுங்க ஆவணங்களையும் சட்டபூர்வமாகவும் பாதுகாப்பாகவும் இணையவழியில் (Online) சமர்ப்பிக்க முடியும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டார்.
புதிய நடைமுறையை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்கு அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியமானது என்றும், அந்த ஒத்துழைப்பு கிடைத்தால் அக்டோபர் 01 ஆம் திகதி முதல் அதை வெற்றிகரமாகத் தொடங்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.