பாதாள உலகக் குற்றவாளி ரத்மலானே சைமா உட்பட மூவர் மலேசியாவில் கைது
பாதாள உலக குற்றக் கும்பல் தலைவராகக் கருதப்படும் கஞ்சிபானி இம்ரானின் மிக நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவராக அடையாளம் காணப்படும் "ரத்மலான சைமா" என்ற போதைப்பொருள் கடத்தல்காரர் உட்பட மூவர், மலேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசிய காவல்துறையும் அந்நாட்டு பாதுகாப்பு அமைப்புகளும் இணைந்து முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போதைப்பொருள் கடத்தல் மற்றும் சர்வதேச குற்றவியல் வலையமைப்புகள் தொடர்பான முக்கிய தகவல்களைப் பெறுவதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை வழிநடத்தி வருவதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபரான கஞ்சிபானி இம்ரானை கைது செய்வதற்காக, சர்வதேச குற்றப் புலனாய்வு அமைப்பான இன்டர்போல் ஏற்கனவே சிவப்பு அறிவிப்பை (Red Notice) வெளியிட்டுள்ளது.
பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற கஞ்சிபானி இம்ரான், வெளிநாடுகளில் இருந்து தனது குற்றவியல் வலையமைப்பின் ஊடாக இலங்கைக்குள் போதைப்பொருள் கடத்தல், பணப்பரிவர்த்தனை மற்றும் பல்வேறு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை ஒருங்கிணைத்து வருவதாக பாதுகாப்புத் தரப்பினருக்கு கிடைத்துள்ள புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், கஞ்சிபானி இம்ரானின் சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பை பலவீனப்படுத்தும் நோக்கில், அவரது முக்கிய கூட்டாளிகள், விநியோகஸ்தர்கள் மற்றும் நிதி வலையமைப்புடன் தொடர்புடையவர்களை இலக்காகக் கொண்டு இலங்கை மற்றும் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் இணைந்து பல்வேறு விசேட நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன.
மலேசியாவில் இடம்பெற்றுள்ள இந்தக் கைது, கஞ்சிபானி இம்ரானின் சர்வதேச குற்றவியல் வலையமைப்புக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகக் கருதப்படுவதுடன், இதன் மூலம் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வரும் என பாதுகாப்பு வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.