இலங்கைக்கு காத்திருக்கும் புதிய நெருக்கடி ; எல் நினோவால் புதிய பொருளாதார அச்சுறுத்தல்
எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக எதிர்வரும் காலத்தில் பணவீக்கம் அதிகரிப்பதற்கான முக்கிய அபாயம் காணப்படுவதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அது கடுமையான அச்சுறுத்தலாக அமையக்கூடும் என இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி
ஆகஸ்ட் மாதத்திற்கான பணவியல் கொள்கை அறிக்கையினூடாக மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.

நீண்டகால வறட்சியான காலநிலை மற்றும் மழைவீழ்ச்சி அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் என்பன விவசாய உற்பத்தியைப் பாதிப்பதே இதற்குக் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பொலன்னறுவை, மிஹிந்தலை, அனுராதபுரம், மொனராகலை உள்ளிட்ட பிரதேசங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது ஓரளவுக்கு மழை வீழ்ச்சி பதிவாகி வருகின்ற போதிலும், அனுராதபுரம், பொலன்னறுவை, வெல்லவாய, அம்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் கடுமையான வறட்சியான நிலையே நிலவுவதுடன் சிறிய குளங்கள் வற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகப் பல பிரதேசங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையும் விவசாய நடவடிக்கைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், ஹிங்குராக்கொட - கிதுல்உத்துவ கிராமத்தின் கிதுல்உத்துவ குளம் வற்றிப்போயுள்ளதால், தாம் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.