அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக அல்ல ; சஜித் வலியுறுத்தல்
அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படக் கூடாது எனவும், ஜனநாயகக் கோட்பாடுகள், அதிகாரப் பகிர்வு, நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகிய அடிப்படைகளில் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தேசிய உரையாடல் அவசியம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்டீவன் திருவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அரசியலமைப்பு நிறுவனங்கள் நம்பகத்தன்மையுடனும் சுதந்திரமாகவும் செயற்படக்கூடிய வகையில் கட்டமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் அல்லது எதிர்க்கட்சியின் அரசியல் தேவைகளுக்காக மாத்திரமன்றி, அரசியல் அதிகாரம் கைமாறும் சந்தர்ப்பங்களிலும் மக்களுக்கும் அரச நிறுவனங்களுக்கும் பாதுகாப்பான வகையில் இவை திட்டமிடப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
நீதித்துறையின் சுதந்திரம், வினைத்திறன் மற்றும் மக்கள் நம்பிக்கை ஆகியன ஒன்றுக்கொன்று வலுசேர்க்க வேண்டிய முக்கிய அம்சங்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், நாடாளுமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வுக்கான சர்வதேச அளவுகோலாக ‘லேட்டிமர் ஹவுஸ்’ (Latimer House) கோட்பாடுகளைப் பயன்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், இலங்கைக்கு விசேட அரசியலமைப்பு நீதிமன்றம் அல்லது மீளாய்வுப் பொறிமுறை ஒன்று தேவையா என்பது தொடர்பில் நீண்டகால அடிப்படையில் பரிசீலிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்தச் சந்திப்பின்போது சுற்றாடல் சட்டத்தின் ஆட்சி தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது முன்வைக்கப்பட்ட ‘சுற்றாடல் சாசனம் 2.0’ இன் கீழ், சிறப்பு சுற்றாடல் நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயம் ஒன்றை அமைப்பது தொடர்பான கொள்கை ரீதியான முன்மொழிவு குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
சுற்றாடல் சட்டங்களை நடைமுறைப்படுத்துதல், சுற்றாடல் நீதி மற்றும் சுற்றாடல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு நீதிமன்றமா, தீர்ப்பாயமா அல்லது இரண்டின் அம்சங்களையும் கொண்ட அமைப்பா பொருத்தமானது என்பது தொடர்பில் பொதுநலவாய நாடுகளின் அனுபவங்களை ஆராய வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.