சபாநாயகருக்கு எதிராக CIDயில் முறைப்பாடு
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) இன்று (11) முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு புதிய மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்டத் தலைவரும் மாநகர சபை உறுப்பினருமான தினேஷ் அபேகோனினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம்
இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் நாடாளுமன்ற ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மையமாக மாற்றப்பட்டுள்ளதாகவும், நிறுவன சட்டக் கோவையின்படி சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தை வேறு எந்த நோக்கத்துக்காகவும் பயன்படுத்த முடியாது எனவும் தெரிவித்தார்.
சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டால், அமைச்சரவை ஒப்புதல் தேவை என்றும், தற்போது அமைச்சரவை ஒப்புதல் பெறாமல் அதற்காக நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்றும் முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
அத்தகைய ஒப்புதலை வழங்க ஆலோசனைக் குழுவுக்கும் அதிகாரம் இல்லை எனவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். இது அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தும் நடவடிக்கை என்பதால், இதனை விசாரிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே,ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகளால் தீர்வையற்ற வர்த்தக நிலையங்களிலிருந்து சட்டவிரோதமாக மதுபான போத்தல்களை பெற்ற சம்பவம் தொடர்பாக, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.