தமிழர் பகுதியில் விவசாயிகளுக்கான இழப்பீடு தொடர்கிறது
மாத்தறை மாவட்டத்தில் நில்வலா நதியின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள உப்புத்தடுப்பு அணை காரணமாக பயிர்ச்செய்கையில் ஈடுபட முடியாமல் போன மாத்தறை மாவட்ட விவசாயிகளுக்கு தொடர்ந்து இழப்பீடுகள் வழங்கப்படும் என்று விவசாய மற்றும் விவசாயிகள் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதன் தலைவர் பேமசிறி ஜாசிங்ஆரச்சி தெரிவிக்கையில், இந்த விவசாயிகள் அனைவருக்கும் வரும் நாட்களில் உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாத்தறை மாவட்டத்தின் குடிநீரில் கடல் நீர் கலப்பதைத் தடுப்பதற்காக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் 2019 ஆம் ஆண்டில் நில்வலா நதியை மையமாகக் கொண்டு ஒரு சிறப்புத் திட்டமாக இந்த உப்புத்தடுப்பு அணை கட்டப்பட்டது.
இந்த உப்புத்தடுப்பு அணை காரணமாக, 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒவ்வொரு வருடமும் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பயிர்கள் சேதமடைந்தன.
இதன்படி, 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான தொடர்ச்சியான 7 பயிர்ச்செய்கை போகங்களுக்கான இழப்பீடு வழங்கும் பணிகள் கடந்த மே 27 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
உப்புத்தடுப்பு அணையினால் பாதிக்கப்பட்ட மொத்த விவசாயிகளின் எண்ணிக்கை சுமார் 5,000 ஆகும் என்பதுடன், பயிர்நிலங்களின் அளவு சுமார் 12,800 ஏக்கர்களாகும்.
இதன்கீழ், 2026 ஜூன் 09 ஆம் திகதியளவில் 2,811 ஏக்கர் நிலப்பரப்புக்கு உரிய 1,322 விவசாயிகளுக்கு சுமார் 141.37 மில்லியன் ரூபாய் இழப்பீட்டுத் தொகை காசோலைகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், இந்த நிலைமையால் பயிர்ச்செய்கையில் ஈடுபட முடியாமல் போன ஏனைய மற்றும் மீதமுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் வரும் நாட்களில் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்றும் விவசாய மற்றும் விவசாயிகள் காப்புறுதிச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.