பௌத்த மதத்திற்கு எதிராக கருத்து; ஜனாதிபதியும், பிரதமரும் மன்னிப்பு கோர வேண்டும்
பௌத்த மதத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோர் மன்னிப்பு கோர வேண்டும் என கொட்டபிட்டிய ராகுல தேரர் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை பௌத்த மகா சங்க சம்மேளனத்தில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது தேரர் மேலும் கூறுகையில்,

யாழ்ப்பாணம் திஸ்ஸ விகாரை வரலாற்று சிறப்புமிக்க இடம்
நாட்டில் இனங்களுக்கு இடையிலும் மதங்களுக்கிடையிலும் பிரச்சினை இல்லை சிலர் பகிரங்கமாக இனவாத மற்றும் மதவாத கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
அந்த பட்டியலில் ஜனாதிபதியும் பிரதமரும் முன்னிலை வகிக்கின்றனர். யாழ்ப்பாணம் திஸ்ஸ விகாரை என்பது வரலாற்று சிறப்புமிக்க இடமாகும். வழிபாடுகளில் ஈடுபடுவதற்காகவே பௌத்த தேரர்கள் அங்கு செல்கின்றனர்.
எனினும், பௌத்த வைராக்கியத்தை பரப்புவதற்காகவே தேரர்கள் யாழ்ப்பாணத்திற்கு செல்வதாக ஜனாதிபதி கூறியுள்ளார். அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காகவே அல்லது வீழ்த்துவதற்காகவோ நாங்கள் ஒன்றுக் கூடுவதில்லை. பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் ஜனாதிபதியும் பிரதமரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
அதற்காக ஜனாதிபதியும், பிரதமரும் மன்னிப்பு கோர வேண்டும். அரசாங்கம் உரிய பாதையில் பயணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கிலேயே நாங்கள் ஒன்றுக்கூடியுள்ளோம்.
அதேநேரம், பாலியல் தொடர்பான கல்வி நாட்டிற்கு அவசியமற்றது. பாலியல் தொடர்பான கல்வியை அறிமுகப்படுத்த அண்மையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
பாலியல் தொடர்பான போதிய தெளிவினை அனைவரும் கொண்டுள்ளார்கள். எனவே அந்த கல்வி தேவையற்றது என கொட்டபிட்டிய ராகுல தேரர் தெரிவித்துள்ளார்.