காரைக்காலில் கொண்டு வந்து விடப்பட்ட நாகபாம்பு: மீளவும் பிடிக்கப்பட்டது
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட இணுவில் காரைக்கால் சிவன் கோவில் சூழலில் சமூகப் பொறுப்பற்ற இருவரால் இன்று சனிக்கிழமை கொண்டு வந்து விடப்பட்ட ஆறு அடி நீளமான நாக பாம்பு மீளவும் பிடிக்கப்பட்டு வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் சிவன் கோவில் பகுதியில் ஆறு அடி நீளமான நாகபாம்பை இருவர் கொண்டு வந்து விட்டுச் சென்ற நிலையில் இதுதொடர்பில் தகவல் அறிந்த நல்லூர் பிரதேச சபையின் அப்பகுதி வட்டார உறுப்பினர் சி.கௌசல்யா இதுதொடர்பில் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் பத்மநாதன் மயூரனின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். அவர் ஊடாக வன விலங்குப் பாதுகாப்பு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் அப் பாம்பினை அப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மீளப் பிடித்து அங்கு வருகை தந்திருந்த வனவிலங்குப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் கையளித்தனர்.
நாகப்பாம்பினைப் பிடிப்பதற்குச் சில இளையவர்கள் துணிகரமாகச் செயற்பட்டிருந்தனர். இதேவேளை, இந்துக்கள் மத்தியில் நாக வழிபாட்டு முறை உள்ளமையால் நாக பாம்பை அடித்துக் கொல்வதற்குப் பலருக்கும் தயக்கம். இதனால், அதனை உயிருடன் பிடித்து வந்து ஆலயச் சூழலில் விட்டுச் செல்கின்றனர். புராதன ஆலயமான காரைக்கால் சிவன் கோவிலைச் சுற்றிப் பல பாம்பு புற்றுக்கள் உள்ளன. அந்தப் புற்றுக்களுக்குள் தற்போது நாகபாம்பு உள்ளிட்ட பாம்புகள் குடி கொண்டுள்ளன.
இந்நிலையில் அவை தற்போது மேற்படி ஆலயத்தை அண்மித்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள்ளும், விவசாய காணிகளுக்குள்ளும் படையெடுக்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் பாம்புகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.