வடக்கில் சீனாவின் நடமாட்டம்; குற்றம் சுமத்தும் இந்தியா!
வடமாகாணத்தில் கடலட்டை பண்ணை தொடங்குவதற்கு சீன ராணுவம் அதிநவீன சாதனங்களை பயன்படுத்துவதாக தமிழ்நாடு புலனாய்வு பிரிவு எச்சரித்துள்ளது.
மாநில புலனாய்வு பணியகம் எச்சரிக்கை
இலங்கையில் சீன இராணுவத்தின் பிரசன்னம் அதிகரித்துள்ளமை தொடர்பாக தமிழ்நாடு கரிசனை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் மாநில புலனாய்வு பணியகம் எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. அயல் நாட்டில் சீனாவின் ஆதிக்கம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதென கூறியுள்ள மாநில புலனாய்வு பணியகம் கரையோர பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்கும்படியும் கோரியுள்ளது.
சீன இராணுவத்தினரின் நடமாட்டம் செய்மதிகள் போன்ற உயர் தொழிநுட்ப சாதனங்களின் பயன்பாடு இலங்கையின் வடபகுதியில் ஆளில்லா விமானங்கள் ஏனைய சாதனங்களின் பயன்பாடு போன்றவற்றினால் தமிழ்நாட்டின் கரையோர பகுதிகளில் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் அவசியம் எனவும் மாநில புலனாய்வு பிரிவினர் அறிவித்துள்ளனர்.
இலங்கையை சேர்ந்த அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர்களது உதவியுடன் சீன இராணுவத்தை சேர்ந்த சிலர் இரகசியமாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளதக சில நாட்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.
அதேவேளை சீன பிரஜைகளின் நடமாட்டம் முல்லைத்தீவு, அனலைதீவு, மீசாலை, சாவகச்சோி உள்ளிட்ட வடக்கில் பல பகுதிகளில் தமிழ் மீனவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கள் ஒரேயொரு வாழ்வாதாரத்திற்கான வழியாக காணப்படுகின்ற கடல்வளத்தை சீனர்கள் பயன்படுத்துகின்றனர் என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும் சீனாவின் இந்த செயல்பாட்டினால் வடக்கு கிழக்கு பகுதியில் இந்தியாவின் செல்வாக்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என தமிழ் மக்கள் அஞ்சுவதாக புலனாய்வு பிரிவினர் எச்சரித்துள்ளனர்.