மேர்வின் சில்வாவுக்கு எதிரான இலஞ்ச ஊழல் வழக்கு ; சாட்சி விசாரணை ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை, மேலதிக சாட்சி விசாரணைக்காக ஜனவரி மாதம் 19 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டது.
தனது சட்டரீதியான வருமானத்தை மீறி 150 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்கள் மற்றும் ஆதனங்களை சட்டவிரோதமான முறையில் சம்பாதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பிரதிவாதியான மேர்வின் சில்வா சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிக்கு இன்றைய தினம் வழக்கு விசாரணையில் ஆஜராக முடியாது என அறிவிக்கப்பட்டதையடுத்து, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதிபதி மேலதிக சாட்சி விசாரணையை ஜனவரி மாதம் 19 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.
அன்றைய தினம் சாட்சிகள் இருவரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து அழைப்பாணை பிறப்பிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
2010 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் தனது சட்டரீதியான வருமானத்தை மீறி 150 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்கள் மற்றும் ஆதனங்களை சட்டவிரோதமான முறையில் சம்பாதித்ததன் மூலம் இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் குற்றமொன்றை இழைத்துள்ளதாகக் குற்றம் சாட்டி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.