பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி
நுவரெலியா கொத்மலை பேருந்து விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. ஹட்டன்-கம்பொல பிரதான வீதியில் திங்கட்கிழமை (12) ஆம் திகதி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் பங்கேற்றவர்கள் பூக்களைத் தூவி விளக்குகளை ஏற்றி அஞ்சலி செலுத்தினர். கொத்மலை, ரம்பொட கரடி எல்ல பகுதியில் (11) ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர்.
சுமார் 40 பேர் சிகிச்சை
விபத்தில் காயமடைந்த சுமார் 40 பேர் நுவரெலியா, நாவலப்பிட்டி மற்றும் கம்பளை அடிப்படை மருத்துவமனைகளிலும், பேராதனை மற்றும் கண்டி போதனா மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருவதுடன் அவர்களில் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ளதாகவும் நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த ஹக்மன தெரிவித்தார்.
விபத்தில் காயமடைந்த பேருந்தின் நடத்துனர் கம்பளை ஆதார மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்ற பின்னர் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
விபத்துக்குப் பிறகு தொலைந்து போன பேருந்து டிக்கெட் புத்தகத்தை கொத்மலை பொலிஸார் மீட்டுள்ளனர். இதற்கிடையில், நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகன ஆய்வாளர் ஜாலிய பண்டார, ஆரம்ப விசாரணைகளின் போது, சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால் பேருந்து விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தார்.
விபத்துக்கு பேருந்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு எதுவும் காரணமல்ல, மாறாக பேருந்தில் இருந்த இருக்கைகளின் எண்ணிக்கையை விட அதிகமானோர் பேருந்தில் நின்று கொண்டு பயணித்தமையால், பேருந்து விபத்துக்குள்ளான போது ஏராளமானோர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்" என்றார்.
பேருந்து பொறுப்பற்ற முறையில் இயக்கப்படுகிறதா என்பதை கண்டறிய, வீதியில் பல இடங்களில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது பேருந்தின் ஓட்டுநர் பொறுப்பற்ற முறையில் ஓட்டவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் ஆய்வாளர் மேலும் தெரிவித்தார்.