புதிய காற்றாலை மின் திட்டங்களுக்கு அமைச்சரவை அனுமதி
மன்னார், முள்ளிக்குளம் பிரதேசத்தில் தலா 50 மெகாவோட் காற்றாலை மின்சார உற்பத்தி நிலையங்கள் இரண்டை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2030 ஆம் ஆண்டளவில் நாட்டுக்கான மின்சார வழங்கலின் 70 வீதம் மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களிலிருந்து பூர்த்தி செய்யும் குறிக்கோளை அடைவதற்கான அரசின் விரிவான திட்டத்துக்கமைய 20 ஆண்டு தொழிற்பாட்டு காலப்பகுதியில் நிர்மாணித்தல், உரித்தை கொண்டிருத்தல் மற்றும் அமுல்படுத்துதல் அடிப்படையில் 100 மெகாவாற்று காற்றாலை மின்னுற்பத்திப் பூங்கா (தலா 50 மெகாவாற்று கொண்ட 02 மின்னுற்பத்தி நிலையங்கள்) திட்டத்தை அமுல்படுத்துவதற்காக தனியார்த் துறையின் ஆர்வமுள்ள அபிவிருத்தியாளர்களிடமிருந்து முன்மொழிவுகளைக் கோருவதற்காக 2025-02-10 திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய, சர்வதேச போட்டி விலைமனு கோரல் முறைமையைப் பின்பற்றி மேற்குறித்த திட்டத்தை அமுல்படுத்துவதற்கான முன்மொழிவு கோரப்பட்டு, ஏழு பேர் (7) தமது திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளார்கள்.
மேற்குறித்த முன்மொழிவுகளை மதிப்பீடு செய்த பின்னர், அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை உடன்பாட்டு குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளின் அடிப்படையில் Consortium of Vidullanka PLC & David Pieris Motor Company (Lanka) Limited மற்றும் Wind Force PLC ஆகியவற்றுக்கு மேற்குறித்த இரண்டு 50 மெகாவோட் காற்றாலை மின்னுற்பத்தி வசதிகளை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.