இரண்டு மனைவிகள் ஒரு கணவர்... பிரித்துக்கொள்ள வினோத தீர்ப்பால் வாய் பிளக்கும் நெட்டிசன்கள்
இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இரண்டு மனைவிகள் ஒரு கணவரை பிரித்துக்கொள்ள பஞ்சாயத்தில் வினோத தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராம்பூர் மாவட்டத்தில் அசிம் நகர் பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட நாக்லியா அகில் கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர்.

சமமாகப் பகிர்ந்து கொள்ள நேர அட்டவணை
ஒரு திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது, மற்றொன்று காதல் திருமணம். இரு மனைவிகளும் கணவன் மீது முழு உரிமை கோரி தினமும் சண்டையிட்டு வந்துள்ளனர்.
இந்தச் சண்டை முற்றி அசிம் நகர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்றது. பொலிஸார் இந்தப் பிரச்சினையை தீர்க்கும்படி கிராமப் பெரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
சம்பவம் தொடர்பில் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் நடந்த பஞ்சாயத்தில், கணவரை இரு மனைவிகளும் சமமாகப் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஒரு நேர அட்டவணை ஒன்று போடப்பட்டது
அதன்படி, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய வாரத்தின் முதல் மூன்று நாட்கள் முதல் மனைவியுடன் இருக்க வேண்டும்.
வியாழன், வெள்ளி, சனி ஆகிய அடுத்த மூன்று நாட்கள் கணவன் இரண்டாவது மனைவியுடன் இருக்க வேண்டும். அதேவேளை வாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை கணவன் தனது விருப்பப்படி இருவரில் யாருடன் வேண்டுமானாலும் இருக்கலாம்.
இந்த தீர்ப்பை கணவர் மற்றும் இரண்டு மனைவிகளும் ஏற்றுக்கொண்டு, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த வினோத ஒப்பந்தம் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.