யாழில் அதிகரிக்கும் டெங்கு நோய்: இன்று முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை!
யாழில் அதிகரித்து வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்றையதினம் (24-01-2024) விழிப்புணர்வு நடைபவனி நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு வடமாகாண சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
திருநெல்வேலி சந்தியில் இருந்து காலை ஆரம்பித்த டெங்கு நோய் விழிப்புணர்வு நடைபவனி பலாலி வீதி வழியாக பரமேஸ்வரா சந்தியினை அடைந்து, அங்கிருந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான 0-நுழைவாயில் வரை இடம்பெற்றது.
குறித்த விழிப்புணர்வு நடைபவனியில் வடமாகாண சுகாதார பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன், நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி.யசோதா உதயகுமார், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி, கோப்பாய் பொலிசார், சுகாதார பரிசோதர்கள், மருத்துவ மாதுகள், யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தனியார் கல்வி நிறுவன மாணவர்கள், நல்லூர் பிரதேச சபையினர் என பலரும் கலந்துகொண்டனர் .
விழிப்புணர்வு நடைபவனியில் டெங்கு நோய் தொடர்பான பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டதுடன், பொது சுகாதார பரிசோதகர்களால் பல்கலைக்கழக மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.