இலங்கையின் சுற்றுலாத்துறையில் பாரிய மாற்றங்கள் ; 40 நாடுகளுக்கு விசா இல்லாத பயணமா?
இலங்கையின் சுற்றுலா உட்கட்டமைப்பை மேம்படுத்துவதன் ஒரு பகுதியாக, சிவனொளிபாத மலை உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களில் கேபிள் கார் (Cable Car) கட்டமைப்புக்களை அறிமுகப்படுத்துவது குறித்த முன்மொழிவுகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் இன்று (28) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சுற்றுலாப் பணிக்குழு கூட்டத்தில் இது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) வெளியிட்டுள்ள தகவலின் படி, இக்கூட்டத்தில் நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கையை ஏற்று, சிவனொளிபாத மலை பகுதியில் கேபிள் கார் திட்டத்தை முன்னெடுப்பது குறித்து மீளாய்வு செய்யப்பட்டுள்ளது.

எல்ல போன்ற இடங்களும் கேபிள் கார் திட்டத்திற்குப் பொருத்தமான இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த திட்டங்களுக்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை (Feasibility Studies) நடத்துவதற்கும், தொழில்நுட்ப மற்றும் சுற்றுச்சூழல் அறிக்கைகளைப் பெறுவதற்கும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில், எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி முதல் 40 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு விசா இல்லாத பயண வசதியை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
யால உட்பட 19 தேசிய பூங்காக்களில் கழிப்பறை மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது. தற்போதுள்ள வசதிகளைப் பராமரிக்கும் பொறுப்பு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய நவீன சுகாதாரக் கட்டமைப்புகளை நிறுவுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கொள்ளுப்பிட்டி முதல் கடற்கரைப் பகுதியை உள்ளடக்கிய ஒரு பிரத்யேக சுற்றுலா வலயத்தை (Dedicated Tourism Zone) உருவாக்குவது குறித்து அதிகாரிகள் ஆராய்ந்தனர்.
இதன் மூலம் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், நாளொன்றுக்கு 2,000 முதல் 3,000 சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது.