யாழில் மங்கல விளக்கேற்றலில் சர்ச்சை ; தவிசாளர் க.ஜெசீதன் மீது விமர்சனம்
யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா ஜெசீதன் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட விதம் தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
மானிப்பாய் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கட்டுடை பகுதியில் வீதியொன்றின் புனரமைப்புப் பணிகளை ஆரம்பிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் கந்தையா ஜெசீதனும் கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது இடம்பெற்ற மங்கல விளக்கேற்றும் நிகழ்வில், தவிசாளர் காலணிகளை கழற்றாமல் மங்கல விளக்கை ஏற்றியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான காணொளி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட நிலையில், அவரது செயற்பாடு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
மங்கல விளக்கேற்றும் நிகழ்வுகள் பொதுவாக சமய மற்றும் கலாசார மரபுகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் நிலையில், இவ்வாறான நிகழ்வுகளில் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் மற்றும் சம்பிரதாயங்கள் குறித்து பொதுமக்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.