வாகனத்தில் பயணிப்போருக்கான காவல்துறை விசேட சோதனை ; 9,000 பேருக்கு அபராதம்
இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கையில் ஆசனப் பட்டிகளை (Seatbelts) அணிய வேண்டும் என்ற சட்டத்தை மீறிய சுமார் 9,000 சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்துப் பிரிவு காவல்துறையினர் மேற்கொண்ட விசேட சோதனைகளின் போதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலைகளின் உள்நுழைவு மற்றும் வெளியேறும் அனைத்து இடங்களிலும், சாரதிகள் மற்றும் பயணிகள் பாதுகாப்புப் பட்டிகளை அணிந்துள்ளனரா என்பது குறித்து காவல்துறை அதிகாரிகளால் தீவிரமாகப் பரிசோதிக்கப்படுகிறது.

கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 01 ஆம் திகதி முதல், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகள் மட்டுமன்றி, முன் மற்றும் பின் இருக்கைகளில் அமர்ந்திருக்கும் அனைத்துப் பயணிகளும் பாதுகாப்புப் பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டது.
வீதிப் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் விபத்துக்கள் ஏற்படும் போது ஏற்படக்கூடிய காயங்கள் அல்லது உயிரிழப்புகளைக் குறைப்பதே இந்தச் சட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
வெறும் அபராதப் பணத்திலிருந்து தப்பிப்பதற்காக அன்றி, தமது மற்றும் ஏனைய பயணிகளின் உயிர்ப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த சட்டத்திற்கு மதிப்பளிக்குமாறு காவல்துறை சாரதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.