மது மற்றும் போதைப்பொருள் பாவிப்போரின் கவனத்திற்கு ; மிரளவைக்கும் தரவுகள்
போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனை காரணமாக இலங்கையில் நாளொன்றுக்கு 80 முதல் 100 பேர் வரை உயிரிழப்பதாக ராஜரட்ட பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு அறிவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி மனோஜ் பெர்னாண்டோ தெரிவித்தார்.
முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டின் கீழ், நச்சுப் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் அது தொடர்பான கல்வி குறித்த விழிப்புணர்வு ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (28) நடைபெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சட்டவிரோத போதைப்பொருள்
இத்தகைய எண்ணிக்கையிலான மரணங்கள் நாளாந்தம் ஏற்படுவதற்கு வேறு தனிப்பட்ட காரணங்கள் எதுவும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், நாட்டில் அதிகளவான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் காரணியாக புகைப்பிடித்தல் விளங்குவதாகக் குறிப்பிட்ட அவர், மதுபானப் பாவனையினால் மாத்திரம் நாளொன்றுக்கு 10 முதல் 15 மரணங்கள் வரை பதிவாவதாகவும் தெரிவித்தார்.
சட்டவிரோத போதைப்பொருள் பாவனையும் தற்போது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதற்கு பிரதான ஆரம்பப் புள்ளியாக சட்டப்பூர்வமான போதைப்பொருட்களே அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதற்கமைய, ஹெரோயின் பாவிக்கும் நபர் ஒருவர் அதற்கு முன்னர் புகைப்பிடிப்பதற்கு அடிமையாகியிருந்ததாகவும், கஞ்சா பாவிப்பவரும் அதற்கு முன்னர் புகைப்பிடித்தலுக்கு அடிமையாகியிருந்தவரே எனவும் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இதற்கான சான்றுகளும் தரவுகளும் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.