வைத்தியசாலையில் பாதுகாப்பு அதிகாரிகள் மீது தாக்குதல் ; மதுபோதையில் எல்லைமீறிய மூவர்
சிலாபம் பொது வைத்தியசாலையின் பாதுகாப்பு அதிகாரிகள் மூவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில், மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் நபர்கள் இருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலுக்கு உள்ளாகிப் காயமடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடுமையான வாக்குவாதம்
வைத்தியசாலையில் தங்கிச் சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவரைப் பார்ப்பதற்காக, மதுபோதையில் இருந்த மூவர் நேற்று (14) சென்றுள்ளனர்.
அவர்கள் வைத்தியசாலைக்குள் பலவந்தமாக அத்துமீறி நுழைய முயன்ற போது, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதன்போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம், பின்னர் மோதலாக மாறியுள்ளது.
இதனையடுத்தே இருவரும் பாதுகாப்பு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்துச் சிலாபம் தலைமையகப் பொலிஸாருக்கு உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபர்கள் இருவரைக் கைது செய்துள்ளனர்.