திருகோணமலையில் மீனவ படகின் மீதும், மீனவர் மீதும் தாக்குதல்
திருகோணமலை திருக்கடலூர் படகை மோதி சேதப்படுத்தியதுடன் மீனவரையும் தாக்கிய மற்றுமொரு படகிற்கு எதிராக திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த மீனவ படகு ஒன்று 3 பேருடன் வாழைச்சேனை பகுதியில் 40 கடல் மைல் தொலைவில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது செவ்வாய்கிழமை (03) மாலை இன்னுமொரு டாங்கி படகு குறித்த படகை மோதி சேதமாக்கியதுடன் படகின் அணியத்தில் பாதுகாப்பிற்காக தொங்கிக்கொண்டிருந்த மீனவர்மீதும் தாக்குதல் மேற்கொண்டிருந்ததாகவும் திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் இன்று (04) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான குறித்த படகானது அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இன்னுமொரு படகின் உதவியுடன் இன்று காலை (04) திருக்கடலூர் பகுதிக்கு கட்டி இழுத்து வரப்பட்டதாகவும் தாக்குதலுக்கு உள்ளான திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த அருந்தவராசா அருண்குமார் என்ற மீனவர் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
தாக்குதல் மேற்கொண்ட படகு வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த படகாக இருக்கலாம் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனுக்கு தெரியப்படுத்தியதையடுத்து உடனடியாக பாராளுமன்றத்தில் இருந்த மீன்பிடித்துறை அமைச்சருடன் அவர் நேரடியாக சென்று பேசியதுடன் பாதிக்கப்பட்ட தரப்பினருடன் அமைச்சர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடுவதற்கும் ஏற்பாடு செய்வது குறித்து உரிய நடவடிக்கையை விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.