முல்லைத்தீவு சிறுமி ரினோஜாவின் மரணம் குறித்து அர்ச்சுனா விடுத்துள்ள கோரிக்கை
முல்லைத்தீவில் உணவு ஒவ்வாமையால் உயிரிழந்த 12 வயதான சிறுமி ரினோஜாவின் மரணத்திற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவில் 12 வயதான ரினோஜா என்ற சிறுமி உணவு ஒவ்வாமையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

குறித்த சிறுமிக்கு சிகிச்சையின் போது வழங்கப்பட்ட மருந்துகளில் தவறா அல்லது வைத்தியர்களின் தவறா என்பதை தெரியப்படுத்த வேண்டும்.
குறித்த சிறுமியின் இறுதிச்சடங்கிற்குப் பின்னர் அவரது உடற்கூற்றுப்பரிசோதனை அறிக்கையை சமர்ப்பித்துள்ளீர்கள் அதிலும் தவறு நிகழ்ந்துள்ளது.
இவ்வாறு குறித்த சிறுமிக்கு இடம்பெற்ற சிகிச்சைகள் தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பிப்பீர்களா? அதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, சிறுமியின் சிகிச்சையில் ஏதேனும் தவறு நடந்திருந்தால் நீதிமன்றம் முன்னிலையில் அதற்கான சட் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.