யாழ்ப்பாணத்தில் தொல்லியல் தின விழா முன்னெடுப்பு
யாழ்ப்பாணத்தில் தொல்லியல் தின விழா முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை தொல்லியல் திணைக்களத்தின் 135 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தொல்லியல் தின விழா யாழ் கோட்டையில் தொல்லியல் திணைக்கள யாழ். கோட்டை பொறுப்பு அதிகாரி கபிலன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வின் ஓர் பகுதியாக யாழ் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்களுக்கான பயிற்சி நெறி யாழ் மாவட்ட தொல்லியல் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் யாழ் மாவட்டத்தின் தொல்லியல் மரபுரிமைகளை தொல்லியல் திணைக்களத்துடன் இணைந்து பாதுகாத்து வரும் தொல்லியல் ஆர்வலர்களை கௌரவிக்கும் முகமாக கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் வேரும் விழுதுகளும் விருதினை மூவருக்கு வருடாந்தம் வழங்கும் திட்டத்தினை யாழ் மாவட்ட தொல்லியல் திணைக்களம் அறிமுகப்படுத்தி இருந்தது.
இதன் பிரகாரம் 2025 ஆம் ஆண்டிற்கான விருதுகளை யாழ் கலாசார உத்தியோகத்தரும் மரபுரிமை செயற்பாட்டாளருமான மார்க்கண்டு அருட்சந்திரன், விடுதி உரிமையாளரும் தன்னார்வ மரபுரிமை செயற்பாட்டாளரும் அஜந்தா சுப்பிரமணியம், மரபுரிமை தன்னார்வலரும் மெட்டா நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட முகாமையாளருமான பாலயோகஸ்தினி சிவயோகநாதன் ஆகியோர் தொல்லியல் மரபுரிமைகளை பேணி பாதுகாத்தமைக்காக யாழ் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபனால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
இதேவேளை தொல்லியல் மரபுரிமை தன்னார்வலர்கள் பலரும் தொடர்ச்சியாக சேவைகளுக்காக கௌரவிக்கப்பட்டனர் .
இதன் பொழுது யாழ் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், நகர அபிவிருத்தி அதிகாரசபை பொறுப்பு வாய்ந்த அதிகாரி திருமதி கவிதா, யாழ் பல்கலைக்கழக இந்து நாகரீகத்துறைத் தலைவர் சர்வேஸ்வரா ஐயர் பத்மநாதன், யாழ் பல்கலைக்கழக வரலாற்று துறை தலைவர் சாந்தினி அருளானந்தன், தொல்லியல் திணைக்கள உதவி பணிப்பாளர் பந்துலஜீவ, மத்திய கலாசார நிதியத்தின் செயற்றிட்ட முகாமையாளர் தர்மகீர்த்தி, வடமாகாண சுற்றுலா பணியக பணிப்பாளர் திருமதி யசோதரா, யாழ் பல்கலைக்கழக கலாசார சுற்றுலாத்துறை மற்றும் தொல்லியல் துறை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.